பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தட்டை/எள்ளடை/எல்லடை


தட்டை/எள்ளடை/எல்லடை


தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்புகள்
பொட்டுக்கடலை_1/2 கப்
கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)
பூண்டு_2 பற்கள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.
பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.மாவு மழமழவென இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலைப் பருப்பு, பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும்.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.
குறிப்பு:
விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக