பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மோர் மிளகாய்/ஊறுகாய் மிளகாய்


மோர் மிளகாய்/ஊறுகாய் மிளகாய்


அதிக காரமில்லாத மிளகாயாக இருந்தால் நல்லது.காரம் விரும்புவோர் அதற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.
தேவையானவை:
பச்சை மிளகாய்_தேவையான அளவு (நான் போட்டதில் 46 இருந்தது).
தயிர்_மிளகாய் மூழ்குமளவு
உப்பு_தேவைக்கு
செய்முறை:
முதலில் மிளகாயைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து ஈரம் போக நன்றாகத் துடைத்துவிடவும்.
ஒவ்வொரு மிளகாயின் நுனிப்பகுதியிலும் கீறிவிட்டு காம்புப்பகுதியில் மிகுதியானதை நறுக்கிவிடவும்.
அடுத்து ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு தயிர் சேர்த்து,சிறிது உப்பும் போட்டுக் கலக்கி மூடி இரண்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
மூன்றாவது நாள் மிளகாயை மட்டும் எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் அடுக்கி வெயிலில் வைத்து காயவிடவும்.மிளகாய் வைத்திருந்த மோர் பாத்திரத்தை மூடியுடன்(மீதமான மோருடன்) வெயிலிலேயே வைக்கவும்.இரண்டு நாட்களாக தயிரில் ஊறியதால் மிளகாயின் நிறம் மாறியிருகும்.
தேவையானபோது மிளகாயைத் திருப்பிவிடவும்.நம்ம ஊர் வெயிலுக்கு அப்படியே வைத்தாலும் நன்றாகக் காய்ந்துவிடும்.
மாலையில் வெயில் போனதும் மிளகாயை அதை வைத்திருந்த மோர் பாத்திரத்திலேயே எடுத்து வைக்கவும்.
இவ்வாறே இரண்டுமூன்று நாட்களுக்குக் காய வைக்கவும்.அல்லது மிளகாயிலுள்ள நீர் முழுவதும் வற்றிக் காயும்வரை செய்யவும்.
பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது ஒரு வாணலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகாய் வற்றலில் கொஞ்சம் போட்டு பொரித்தெடுத்துக்கொண்டால் தயிர்சாதம்,சாம்பார்சாதம் போன்றவற்றிற்கு அருமையான ஒரு சைட்டிஷ் ஆகும்.
மிகுதியாக இருந்தால் இட்லிப்பொடிக்கு காய்ந்த மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் வைத்துப் பொடித்தாலும் நல்ல மணத்துடன்,சுவையாக இருக்கும். மோர்குழம்பிலும் போடலாம்.

1 கருத்து: